Published : 09 Nov 2019 06:20 PM
Last Updated : 09 Nov 2019 06:20 PM

அயோத்தி தீர்ப்பு; மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் தேவையை வலியுறுத்துகிறது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   

சென்னை

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் கொடுத்திருந்தாலும், அதன் மீது பல கேள்விகளும் எழுகின்றன. மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (1991) தேவை ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:

“நீண்ட பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, ஒரு அறக்கட்டளை மூலம் கோயில் கட்டுவதற்காக இந்துக்களுக்கு அளித்திட வேண்டுமென அந்தத் தீர்ப்பு கூறுகிறது. மேலும், மசூதி கட்டுவதற்காக வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டு காலமாக இப்பிரச்சினையை மையமாக வைத்து உருவாக்கிய வன்முறைகள், கலவரங்களால் துயரமிக்க பல உயிர்ச் சேதங்களை நாடு சந்தித்திருக்கிறது. அயோத்தி பிரச்சினைக்கு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வினை எட்ட முடியவில்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்வு காண வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது.

இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் கொடுத்திருந்தாலும், அதன் மீது பல கேள்விகளும் எழுகின்றன. 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சட்ட விரோதச் செயல் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை மதச்சார்பின்மை மீதான தாக்குதல் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மசூதியை இடித்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கினை விரைந்து நடத்தி குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (1991) தேவையை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அந்தச் சட்டம் உறுதியாக அமலாக்கப்பட வேண்டும் என இந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. எந்த ஒரு மத வழிபாட்டுத் தலம் மீதும் புதிய சர்ச்சையைக் கிளப்புவதற்கு அனுமதித்தல் கூடாது.

மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x