Published : 09 Nov 2019 04:53 PM
Last Updated : 09 Nov 2019 04:53 PM

பட ரிலீஸ் இருப்பதால் ரஜினி பரபரப்பாக பேசுகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்

மதுரை

"ரஜினிக்கு இரண்டு படங்கள் வெளியாகவிருக்கிறது. தனது படங்கள் வெளியாவதற்கு முன்பெல்லாம் பரபரப்பாகப் பேசுவது அவரின் வழக்கம்" என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.

மதுரையில் வைகை ஆற்றில் தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவர், " ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மதுரை உயர்தர நகரமாக மாறி வருகிறது. வரும் தைப்பூசத் திருநாளன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் முழுமையாகத் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

ரஜினிகாந்திற்கு இரண்டு படங்கள் வெளியாகவிருக்கிறது. தனது படங்கள் வெளியாவதற்கு முன்பெல்லாம் பரபரப்பாகப் பேசுவது அவரின் வழக்கம்.

தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடம் எல்லாம் நிரப்பப்பட்டுவிட்டது. தலைவருக்கான வெற்றிடத்தை எடப்பாடியார் நிரப்பிவிட்டார். ரஜினியோ தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக கனவுலகில் மிதக்கிறார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை, மதசார்பற்ற தன்மையை காக்கும் அரசாக அதிமுக விளங்குகிறது. அதற்கு துணையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளார்.

நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தோழமை கட்சி உதவி இல்லாமல் வெற்றி பெற்றோம். மக்களின் ஆதரவோடும் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவாலும்தான் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x