Published : 09 Nov 2019 02:11 PM
Last Updated : 09 Nov 2019 02:11 PM

அயோத்தி தீர்ப்பு; அனைவரும் மதித்து நடக்க வேண்டும்: ரஜினி கருத்து

சென்னை

அயோத்தி தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தீர்ப்பை மதிப்பதாகவும், அனைவரும் மதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன், அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்துத் தரப்பினரும் மத பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x