அயோத்தி தீர்ப்பு; விருப்பு-வெறுப்புக்கு உட்படுத்தாமல் மத நல்லிணக்கம் பேணுவோம்: ஸ்டாலின் கருத்து

அயோத்தி தீர்ப்பு; விருப்பு-வெறுப்புக்கு உட்படுத்தாமல் மத நல்லிணக்கம் பேணுவோம்: ஸ்டாலின் கருத்து
Updated on
1 min read

சென்னை

அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தீர்ப்பை விருப்பு-வெறுப்புக்கு உட்படுத்தாமல் மத நல்லிணக்கம் பேணுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in