Published : 09 Nov 2019 12:57 PM
Last Updated : 09 Nov 2019 12:57 PM
அயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக நடந்துவந்த அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும், மசூதி அமைக்க அயோத்தியிலேயே வேறு முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பை பாஜகவினர் வரவேற்று வருகின்றனர். காங்கிரஸும்கூட வரவேற்பதாகவே தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலோ, ஆதாரங்களின் அடிப்படையியோ அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சட்டம் ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு சமரசத் தீர்ப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீதியை நிலைநாட்டுவதாக இல்லை. சமரச முயற்சியாகவே இருக்கிறது.
ராமர் கோயிலைக் கட்ட மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்று கூறிய நீதிமன்றம் பாபர் மசூதிக்கு நிலம் ஒதுக்கவும் அதைக் கட்டமைக்கவும் ஏன் அறக்கட்டளை நிறுவ உத்தரவிட்டிருக்கூடாது?
முஸ்லிம்கள் ஆவணங்கள் உரிய அளவில் ஒப்படைக்கவில்லை என்றால் இந்துக்கள் ஒப்படைத்த உரிய ஆவணங்கள் என்னென்ன?
சாஸ்திரங்கள் அடிப்படையில் ஒரு சாரரின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கியிருப்பது அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவேத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT