Published : 09 Nov 2019 10:14 AM
Last Updated : 09 Nov 2019 10:14 AM

அயோத்தி தீர்ப்பு: பழனிக்கு பக்தர்கள் வருகை குறைவு; பாதுகாப்பு அதிகரிப்பு- 1500 போலீஸார் குவிப்பு

திண்டுக்கல்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடும் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (சனிக்கிழமை) காலை வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து பழனி மலைக்கோவில், திருஆவினன்குடி கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் படிவழிப்பாதை, மின்இழுவைரயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது‌.

இங்கு வரும் பக்தர்கள், அவர்கள் கொண்டுவரும் பைகள் உள்ளிட்ட அனைத்தும் கடுமையான சோதனை செய்யப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

பக்தர்கள் வருகை குறைந்திருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழனி கோவில், பேருந்துநிலையம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் சிறப்புக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மேற்பார்வையில் போலீஸார் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1500 போலீஸார் குவிப்பு:

அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு திண்டுக்கல் எஸ்.பி சக்திவேல் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம், பேகம்பூர் ரயில் நிலையம், ரயில் தண்டவாளப் பாதைகள், சுற்றுலாத்தலமான பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளிலும் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x