Published : 09 Nov 2019 09:36 AM
Last Updated : 09 Nov 2019 09:36 AM
அயோத்தி தீர்ப்புக்காக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை முடிவடைந்த நிலையில் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் இன்று (நவ.9) காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி உத்தரப் பிரதேசம் உட்பட நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இன்று (நவ.9 சனிக்கிழமை) கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும், பின்னர் விடுமுறை இல்லை எனவும் மாறிமாறி சர்ச்சைகள் எழுந்தன.
இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் பிராபகர், மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த வித விடுமுறையும் அறிவிக்கவில்லை என விளக்கினார். மாவட்ட சிஇஓ உமா மகேஸ்வரி நேற்று மாலை பணியிட மாறுதல் பெற்றதால் இதுதொடர்பாக தானும் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனக் கூறினார்.
ஆனால், தனியார் பள்ளிகள் சார்பில் பெற்றோர்களின் செல்போன்களுக்கு விடுமுறை எனக் குறுந்தகவல் வந்துள்ளது. அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை தொலைக்காட்சிகளில் மாறிமாறி தகவல் வரவே பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு சொற்பமாக இருக்கிறது. சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வந்துவிட்டு திரும்பினர். குழப்பமான சூழல் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் வரத்து இல்லை.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன், "அயோத்தி தீர்ப்புக்காக தமிழகத்தில் எந்த ஒரு பள்ளிக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக விடுமுறை அறிவிக்கவில்லை. ஆனால், பள்ளிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-எஸ்.கோவிந்தராஜ் | -எஸ்.கே.ரமேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT