Last Updated : 09 Nov, 2019 07:58 AM

 

Published : 09 Nov 2019 07:58 AM
Last Updated : 09 Nov 2019 07:58 AM

தமிழகத்தில் கோவை, மதுரை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை

தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:தமிழக நிலப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் இலங்கை அருகே மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சேலம்,தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்க வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை புல்புல் புயல், தற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்று, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. அதனால் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்கரிதுர்கில் 12 செ.மீ, புதுக்கோட்டையில் 9 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடி, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ, நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ, கரூர் மாவட்டம் பஞ் சட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மதுரை, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

காற்று மாசு சென்னையில் கடல் காற்று வீசாத காரணத்தால், சென்னையில் உருவாகும் காற்று மாசு, இங்கிருந்து வெளியேறவில்லை. வழக்கமாக தரையிலிருந்து உயரே செல்ல, செல்ல காற்றில் வெப்பம் குறையும். ஆனால் தற்போது வழக்கத்துக்கு மாறாக சுமார் 700 மீட்டர் உயரத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது. அதனால் கீழே உள்ள காற்று மாசு மேலே செல்லவில்லை. அங்கு வெப்பம் குறைந்து, கடல் காற்று வீசத் தொடங்கிய பிறகே இயல்புநிலை திரும்பும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x