

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (நவ.7) இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இன்று வரை சாத்தூரில் 31 மி.மீ., திருவில்லிபுத்தூரில் 16 மி.மீ., சிவகாசியில் 20 மி.மீ., ராஜபாளையத்தில் 4 மி.மீ., காரியாபட்டியில் 34 மி.மீ., வத்திராயிருப்பில் 5 மி.மீ., பிளவக்கல் பகுதியில் 5 மி.மீட்டரும், விருதுநகரில் அதிகபட்சமாக 39 மி. மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணை, கோவிலாறு அணை, வெம்பக்கோட்டை அணை, ஆனைக்குட்டம் அணை, குல்லூர்சந்தை அணை, சாஸ்தா கோயில் அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
கனமழையால் விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அதை ஒட்டியுள்ள காடுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.