Published : 07 Nov 2019 06:06 PM
Last Updated : 07 Nov 2019 06:06 PM

'அடங்கல்' சான்றில் வேளாண் பயிர்களை கணக்கிடுவதில் குளறுபடி: உற்பத்தி வீழ்ச்சி, உயர்வால் விவசாயிகள் நிரந்தர பாதிப்பு  

மதுரை

'அடங்கல்' சான்றில் வேளாண் சாகுபடி பரப்பு, உற்பத்தியை கணக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், விளைபொருட்கள் உற்பத்தி உயர்வு, வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் நிரந்தரமாக பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மற்றும் தைப்பட்டம் ஆகிய மூன்று பருவகாலங்களில் வேளாண் பயிர்கள், தோட்டக் கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் இந்த பயிர்கள் சாகுபடி பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்கும்.

அதற்கு, ஒவ்வொரு கிராம அளவிலும் விஏஓக்கள் பராமரிக்கும் விவசாய அடங்கல் சான்று முக்கியமானது. ஒரு சர்வே எண்ணில் எந்த பயிர்கள், எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது, அதன் மகசூல் என்ன?, அவை ஒரு போக சாகுபடி நிலமா? அல்லது இரு போக சாகுபடி நிலமா? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஒவ்வொரு விவசாய நிலத்தின் அடங்கல் சான்றிலும் தெரிந்துவிடும்.

கடந்த காலத்தில் விஏஓ-க்கள் நேரடியாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று ஒவ்வொரு சர்வே எண் சாகுபடி நிலத்தையும் பார்வையிட்டு அதில் விளையும் பயிர்கள், மகசூல் விவரங்களை பதிவிடுவார்கள்.
ஆனால், சமீப காலமாக அடங்கல் சான்று புள்ளி விவரங்களை விஏஓ-க்கள் சரியாக வழங்குவதில்லை என்றும், அதற்கு விஏஓக்கள் பற்றாக்குறை முக்கிய காரணம் என்றும் சொல்கின்றனர்.

அதனால், தற்போது அடங்கல் சான்றில் விவசாய விவரங்களை பதிவு செய்ய விவசாயிகள், விஏஓ-க்களை சந்தித்து பதிவு செய்யாமலே, TN-eAdangl என்ற App-ஐ டவுன்லோடு செய்த அதிலே தன்னுடைய சர்வே எண்ணில் உள்ள விவசாய விவரங்களைப் பதிவு செய்யலாம்.
ஆனால், பெரும்பாலான சிறு, குறு விவசாயிகளுக்கு முன்பும், இப்போதும் சரி இந்த ‘அடங்கல்’ ஆவணம் பராமரிப்பின் முக்கியத்துவம் தெரியவே இல்லை. அதற்கான ஆர்வமும் இல்லை.

அடங்கல் சான்றை வைத்தே, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்பட நாட்டின் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டமும், வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், அதற்கு தேவையான மானிய உதவி, சலுகைகளை வழங்கமும் மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்கும்.

தற்போது தவறான அடங்கல் சான்று புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாய சாகுபடி பரப்பு நிலங்கள், அதன் உற்பத்தியை மத்திய, மாநில அரசுகள் தவறாக மதிப்பீட்டு தேவைக்கு தகுந்தார்போல் விவசாய உற்பத்திய பெருக்கவும், குறைக்கவும் முடியவில்லை. அதனால், உற்பத்தி அதிகமாகி விலை வீழச்சி ஏற்படுவதும், பற்றாக்குறை அதிகரித்து விலை அதிகமாகியும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில், ‘‘விவசாய உற்பத்திக்கு அடிப்படை ஆவணம் இ-அடங்கல் சான்றுதான். இந்த அடங்கல் ஆவண விவரங்களை விஏஓ.,கள் சேகரித்து வைப்பார்கள். அதை தாசில்தார், ஆர்.ஐக்கள் சரிபார்த்து மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் அதை சரிப்பார்த்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அரசு துறை இயக்குனர், செயலருக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் மூலம் மாநில அரசு, நடப்பாண்டு தேவைக்கு ஏற்ப பழங்கள், காய்கறிகள், நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்கள் சாகுபடியை திட்டமிடும். மத்திய, அரசும் இதே நடைமுறையை பின்பற்றும். தேசிய அளவிலான வேளாண் திட்டங்களுக்கும், இந்த அடங்கல் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலே நிறைவேற்றப்படுகிறது.

வேளாண்பொருட்கள் உற்பத்தியை வைத்தே சிறு, குறு தொழில்நிறுவனங்களும் தங்கள் உணவுப்பொருட்கள் உற்பத்தியை திட்டமிடும். ஆனால், சமீப காலமாகவே அடங்கல் சான்று புள்ளி விவரங்கள் சரியாக இல்லாததால் வேளாண் பொருட்கள் விலை எதிர்பாராத வகையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றனர், ’’ என்றனர்.

இதுகுறித்து விஏஓ-க்களிடம் கேட்டபோது, ‘‘நேரடி கள ஆய்வு மூலமே அடங்கல் சான்று புள்ளி விவரங்கள் பராமரிக்கப்படுகிறது.
ஆனால், விஏஓக்கள் பற்றாக்குறை, அரசின் திட்டங்கள், அதற்கான ஆய்வு உள்ளிட்டவற்றால் வேலைப்பழு விஏஓ-க்களுக்கு அதிகமாக உள்ளது. இ-அடங்கல் திட்டத்திற்கு அனைத்து விஏஓ-க்களுக்கு இன்னும் இன்டர்நெட், கணிணி வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை. அரசின் அலட்சிமே, சரியான திட்டமிடுதல் இல்லாததே வேளாண் பொருட்கள் விலை உயர்வு, குறைக்கு முக்கிய காரணம், ’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x