Published : 07 Nov 2019 01:52 PM
Last Updated : 07 Nov 2019 01:52 PM
சென்னை
பாரிமுனையில் பணம் செலுத்தும் ஏடிஎம் இயந்திரத்தில் கள்ள நோட்டுகளைச் செலுத்திய நபர் வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொத்தவால் சாவடி கோவிந்தப்பப்ப நாயக்கன் தெருவில் கோட்டக் மஹிந்திரா வங்கிக் கிளையின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் வசதி உள்ளது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி ஒரு நபர் செலுத்திய பணத்தில் 5 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருப்பது தெரியவந்தது.
இதைச் சோதித்த வங்கி ஊழியர்கள் அது யாரால் போடப்பட்டது என்பதை ஆய்வு செய்தனர். அப்போது அது மண்ணடி ஆதியப்பன் தெருவில் வசிக்கும் சந்திரபிரகாஷ் கன்காரியா (42) என்பவர் ஏடிஎம்மில் பணம் செலுத்தியிருப்பது தெரியவந்தது. அவர் கடந்த 4-ம் தேதி இரவு 9.45 மணி அளவில் வங்கியில் அமைந்துள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் ரூ.40,000/- (2000x4, 500x64) செலுத்தியுள்ளார்.
அதில் ஐந்து 500 ரூபாய் நோட்டுகள் (மொத்தம் ரூபாய் 2500) கள்ள நோட்டுகள் எனத் தெரியவந்தது. இதில் 6-ம் தேதி ரூ.37,500/- மேற்படி சந்திரபிரகாஷ் கன்காரியா கணக்கில் வரவு வந்துள்ளது. எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலாளர் ஷேக் சுலைமான் அளித்த புகாரின்பேரில் போலீஸார் சந்திரபிரகாஷ் கன்காரியாவைக் கைது செய்தனர்.
அவரிடம் கள்ள நோட்டுகள் கிடைத்தது எப்படி என விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். சந்திரபிரகாஷ் மீது ஐபிசி பிரிவு 489(B)- ன் ( போலியாகத் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டை விற்பது, வாங்குவது, பெறுவது அல்லது அவற்றைச் செலவாணி செய்வது அவற்றை நல்ல நோட்டுக்களைப் போல் பயன்படுத்தும் குற்றம்) கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT