

சென்னை
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (நவ.7) புவியரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"நேற்று மத்தியக் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. 'புல்புல்' என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசக் கரையை நோக்கி நகரக்கூடும்.
தமிழக மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வெப்பச் சலனத்தின் காரணமாக ஒருசில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை தொடரும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக, திருப்பூரில் 5 செ.மீ., சிவகங்கையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது".
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.