

மதுரை
மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டப்பணிகள் ஆட்சியர் ஆலோசனையுடன் விரைவில் தொடங்கும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு வெங்கடேசன் பேட்டியளித்தார்.
அதேபோல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நீண்ட நாட்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்த பெட் சிடி ஸ்கேன் இன்று காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைப்பதற்காகத் தமிழக முதல்வருக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று (நவ.6) காலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்,
"மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நீண்ட நாட்களாகப் பயன்பாட்டுக்கு வராமல் இருந்த பெட் 'சிடி' ஸ்கேன் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சுகாதார செயலாளர் மூலம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.
அதனைத் தொடர்ந்து இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் பெட் சிடி ஸ்கேன் வசதியை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
நோயாளிகளின் வசதிக்காக என்னுடைய கோரிக்கையை ஏற்று பெட் சிடி ஸ்கேன் வசதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி செய்த தமிழக முதல்வருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் சார்ந்த பணிகள் மற்றும் மதுரையில் இருந்து மலேசியாவிற்கு புதிய விமானப் போக்குவரத்து தொடங்குவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து வரும் கூட்டத்தொடரில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து விமானப் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளோம்.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் சார்ந்த திட்டப்பணிகள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனையின் கீழ் விரைவில் தொடங்கப்படும்" என்று கூறினார்.