Published : 06 Nov 2019 10:06 AM
Last Updated : 06 Nov 2019 10:06 AM

சிறுவாணி அணை நீர்க்கசிவை சரி செய்ய ரூ.5 கோடியில் திட்டப் பணி: நடவடிக்கையை தொடங்கியது கேரள அரசு

டி.ஜி.ரகுபதி

கோவை 

சிறுவாணி அணையின் நீர்க்கசிவு களை சரி செய்ய, ரூ.5 கோடி மதிப்பில் திட்டப்பணி மேற் கொள்வதற்கான நடவடிக்கையை கேரள அரசு தொடங்கியுள்ளதாக தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரள பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணை, கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அணையின் மொத்த நீர்தேக்க உயரம் 49.50 அடி ஆகும். சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர், வழியோரமுள்ள 22 கிராமங்கள் மற்றும் மாநகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி அணையில் 49.20 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. அணையில் இருந்து தற்போது 109 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்பட்டு கோவைக்கு விநியோகிக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சிறுவாணி அணை மற்றும் அடிவார நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. நடப்பு வடகிழக்கு பருவ மழைக்காலத்திலும் சிறுவாணி அணையில் குறிப்பிட்ட மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்தது.

ஆனால், ஒருமுறை கூட அணை நிரம்பவில்லை.

கேரளாவில், கடந்தாண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பிறகு, அங்குள்ள அனைத்து அணைகளிலும் நீர்த்தேக்க உயரத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக 1 மீட்டர் அளவு குறைக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டது. இதனால் சிறுவாணி அணையிலும் மொத்த நீர்த்தேக்க உயரம் 49.50 அடி ஆக இருந்தாலும், அதிகபட்சம் 45 அடி உயரம் வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் நீர் வந்தால், மதகு மூலம் வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையில், “சிறுவாணி அணையின் நீர் வெளியேற்றும் பகுதியில் நீர்க்கசிவு உள்ளது. இதன் மூலம் பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லையென்றாலும், குறிப்பிட்ட அளவுக்கு நீர் கசிந்து வீணாகிறது. இதை சரி செய்ய தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் சமூகஆர்வலர்கள்.

இதுதொடர்பாக, தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது,‘‘ சிறுவாணி அணை யின் நீர்க்கசிவுகளை சரி செய்ய கேரள அரசிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. கேரள அரசால் முதலில் ரூ.12 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பின்னர், சில மாற்றங்களுக்கு பிறகு ஏறத்தாழ ரூ.5 கோடி மதிப்பில் மதிப்பீடு தயாரித்து, கேரள அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் பணிகளை தொடங்கியுள்ளனர்’’ என்றனர்.

விரைவில் சரி செய்யப்படும்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கோவைப்பிரிவு செயற் பொறியாளர் செல்லமுத்து கூறும் போது,‘‘ சிறுவாணி அணையின் நீர்க் கசிவுகளை சரி செய்ய திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அந்த பணிகளை மேற்கொள்ள தகுந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் கேரள அரசின் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். ‘பாலியுரேட்டின் ரெசின்’ முறையில் இந்த நீர்க்கசிவுகளை சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பிறகு, திட்ட மதிப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செலுத்துவர்.

அணையில் தண்ணீர் இருக்கும் சமயத்திலேயே, இப்பணிகள் மேற்கொள்ளப்படும். விரைவில் நீர்க்கசிவுகளை சரி செய்யும் பணி தொடங்கப்படும் என கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x