Published : 06 Nov 2019 09:47 AM
Last Updated : 06 Nov 2019 09:47 AM
சென்னை
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், சென்னையில் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் நேற்றுவெளியிட்ட அறிக்கையில், ‘தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் நவம்பர் 7-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடக்கவுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக தோல்வி அடைந்தது. அதன்பிறகும் அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக நீடிக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தேமுதிகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில்வெளியாகலாம் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்று, வென்று கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்தும், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் பற்றியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT