Published : 06 Nov 2019 09:39 AM
Last Updated : 06 Nov 2019 09:39 AM
சென்னை
தாராள பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியதற்கு, பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அச் சங்கத்தின் தலைவர் கு.செல்லமுத்து, தென்னிந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுபொதுச் செயலாளர் சு.கண்ணை யன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்திய அரசு, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளுடன் தாராள பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக, பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (ஆர்சிஇபி) நடைபெற்றது.
இந்த ஒப்பந்தத்தால் 16 நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வேளாண் மற்றும் தொழில்துறை சார்ந்த பொருட்கள் இந்தியாவுக்கு அதிக அளவு இறக்குமதி செய்யப்படும். இதனால், இந்தியாவில் உள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். அத்துடன், இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு சாதகமாக அமையும். இதைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் நலன் கருதி..
இதையடுத்து, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக இந்தியா முடிவு எடுத்துள்ளது. உள்நாட்டில் விவசாயம், சிறுதொழில்கள் மற்றும் நாட்டு மக்களின் நலன்களை காக்க பிரதமர் மோடிஎடுத்த துணிச்சலான முடிவைவிவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களால் விவசாயம், தொழில்துறைக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக, வர்த்தக கண்காணிப்பு பிரிவு ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
கரும்பு நிலுவை
நாடு முழுவதும் ரூ.24 ஆயிரம் கோடியும், தமிழகத்தில் ரூ.2,400 கோடியும் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் கரும்பு ஆலைகள் நிலுவை வைத்துள்ளன. எனவே, இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு செல்லமுத்து கூறினார்.
இச் சந்திப்பின் போது, தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மகளிர் அணி தலைவி ராஜரீகா ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT