Published : 05 Nov 2019 05:31 PM
Last Updated : 05 Nov 2019 05:31 PM

வண்டலூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக்கொலை

கொலை செய்யப்பட்ட முகேஷ்.

காஞ்சிபுரம்

வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலத்தில் பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் கூறப்படும் நண்பர் விஜய் துப்பாக்கியுடன் தலைமறைவாகிவிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனைக்கோவில் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (42). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு முகேஷ் (19) மற்றும் லோகேஷ்(18) என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். முகேஷ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் EEE 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

முகேஷின் நெருங்கிய நண்பர் விஜய் (19). இவர் சகோதரர்கள் உதயா மற்றும் அஜித். விஜய் பிரபல தனியார் உணவக சப்ளை நிறுவனத்தில் டெலிவரி வேலை செய்கிறார். இவர்கள் முகேஷ் வசிக்கும் அதே பகுதிக்கு அருகில் உள்ள பார்கவி அவென்யூவில் வசிக்கின்றனர். முகேஷ், விஜய், உதயா அனைவரும் நல்ல நண்பர்கள் என்பதால் இருவர் வீட்டுக்கும் இரண்டு நண்பர்களும் செல்வது வழக்கம்.

அதேபோல் இன்று முகேஷ், நண்பர் விஜய்யைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்தார். இருவரும் தனியாக அறைக்குள் இருந்தனர். அஜித் தனது மனைவியுடன் தனி அறையில் இருந்தார். உதயா வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது விஜய்யின் அறையிலிருந்து திடீரென குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டுள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உதயாவும், அஜித்தும் ஓடிச் சென்று விஜய்யின் அறையில் பார்த்துள்ளனர். அப்போது அவர்களைத் தள்ளிவிட்டு விஜய் வெளியே ஓடியுள்ளார். அறைக்குள் முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவரது வீட்டுக்குத் தகவல் கொடுத்துவிட்டு முகேஷை தூக்கிக்கொண்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கொலை நடந்த விஜய் வீடு

அங்கு அவரைச் சோதித்த மருத்துவர்கள் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகத் தெரிவித்து அவருக்கு முதல் உதவி செய்தனர். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே முகேஷ் உயிரிழந்தார்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து தாழாம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய விஜய்யைத் தேடி வருகின்றனர். விஜய்க்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, அவர் உபயோகப்படுத்தியது என்ன வகை துப்பாக்கி என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய்யின் சகோதரர்கள் அஜித், உதயா ஆகிய இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் யாரும் இல்லை என்பதால் நண்பர்களுக்குள் என்ன நடந்தது, முன் பகையா, துப்பாக்கியால் சுடும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் குற்றச்சம்பவம் நடந்த விதம், குண்டின் வகை, அது என்ன வகை துப்பாக்கி என்பதை அறிய தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ரவுடிகளிடம் மட்டுமே இருக்கும் துப்பாக்கி தற்போது சாதாரணமாக இளைஞர்களிடையே புழக்கத்தில் இருப்பது போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றவாளிகள் கொலை, வழிப்பறி, மிரட்டல், ரவுடியிஸத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x