Published : 05 Nov 2019 02:06 PM
Last Updated : 05 Nov 2019 02:06 PM
சென்னை
வால்டாக்ஸ் சாலையில் நாய்கள் குறுக்கே புகுந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, பிளாட்பாரத்தில் உறங்கியவர்கள் மீது மோதியது. இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
தண்டையார்பேட்டை, வரதராஜ பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன் (60). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் மூலக்கொத்தளத்தில் ஒரு நபரை இறக்கிவிடுவதற்காக காளியப்பன் சவாரி ஏற்றிக்கொண்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மூலக்கொத்தளம் செல்வதற்காக வால்டாக்ஸ் சாலை வழியாக அவர் சென்றுகொண்டிருந்தார்.
ஆட்டோ சென்ட்ரல் ரயில்வே பார்சல் அலுவலகம் அருகே வரும்போது சாலையில் சண்டையிட்ட நாய்கள் வேகமாகச் சென்ற ஆட்டோவின் குறுக்கே பாய்ந்தன. இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்தது. ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன் வெளியே வீசப்பட்டார். ஆட்டோ வேகமாக ஓடி சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் மீது மோதி நின்றது.
இதில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த ரவி என்பவரின் மனைவி அஞ்சலி (46) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளங்கோ என்பவரின் மனைவி சித்ரா (39) , அவரது 13 வயது மகன், 11 வயது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பூக்கடை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனைக் கைது செய்தனர். விபத்தில் உயிரிழந்த அஞ்சலியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT