Published : 05 Nov 2019 01:00 PM
Last Updated : 05 Nov 2019 01:00 PM

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழை வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

சென்னை

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ.5) செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆலங்குடியில் 2 செ.மீ., பேராவூரணி, அரிமலம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்கள் நவ.5-ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், மத்தியக் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் நவ.6, 7 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திர கடற்பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் இயல்பு மழை அளவு 22 செ.மீ. இந்த காலகட்டத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 8% அதிகமாகும்.

வரும் 2-3 தினங்களுக்கு குறிப்பிடத்தகுந்த மழை இருக்காது".

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x