

சென்னை
தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும்? ஏழை மாணவர்களுக்காக மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களின் கைரேகைப் பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (நவ.4) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 3,081 மாணவர்களில் 48 பேர் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, நீட் பயிற்சி மையங்கள் 2 முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், ஏழை மாணவர்களுக்காக மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், மருத்துவப் படிப்பு அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வுப் பயிற்சிக்காக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நீதிபதிகள் சாடினர்.
மேலும், 24 மணிநேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய்தான் ஊதியம் வழங்குவதாகவும் இது அரசுப் பள்ளி ஆசிரியர்களை விட மிகக் குறைவானது என்றும் தெரிவித்த நீதிபதிகள், புனிதமான பணியைச் செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களின் கைரேகைகள் இன்று சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை வழங்கிய கைரேகைகளை சிபிசிஐடி காவல்துறையினர் தங்களிடம் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என்றும் நீட் ஆள் மாறாட்டம் குறித்து ஏதேனும் புகார் பெறப்பட்டுள்ளதா எனவும் சிபிஐ பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.