Published : 04 Nov 2019 10:38 AM
Last Updated : 04 Nov 2019 10:38 AM
சி.பிரதாப்
சென்னை
மத்திய அரசு சார்பில் தலைமை பண்பு மேம்பாடு தொடர்பான தேசிய மாநாடு புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில் இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்த தலைமையாசிரியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற அறிவிப்பு சர்ச்சையாகியுள்ளது.
பள்ளி தலைமைக்கான தேசிய மையம் மத்திய அரசால் 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன்ஒருபகுதியாக, ஆசிரியர்களின் தலைமை பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு ஜனவரி 15 முதல் 17-ம் தேதி வரை புதுடெல்லியில் நடக்கிறது. இதில் இந்தி, ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் இயக்குநர் கடந்த நவ.1-ம் தேதிஅனுப்பிய சுற்றறிக்கையில், இம்மாநாட்டில் கல்வியாளர்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் தங்கள் தலைமை பண்பு சிறப்பு குறித்த அறிக்கை அல்லது வீடியோவை இந்தி அல்லது ஆங்கில மொழியில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்குமுன் நடைபெற்ற பயிற்சிகளில் தமிழ் உட்பட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதற்கு மாறான இந்த அறிவிப்பு ஏற்புடையதல்ல. இந்தி, ஆங்கிலம் தெரியாத பல தலைமையாசிரியர்கள் நிர்வாகம் மற்றும் தலைமை பண்பில் திறம்பட பணியாற்றி வருகின்றனர். அவர்களை கல்வித்துறை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். அப்போதுதான் பயிற்சியில் கிடைக்கும் புதிய கற்றல் முறைகள், உத்திகளை நமது பள்ளிகளில் செயல்படுத்த முடியும்.
தற்போது ஒருங்கிணைந்த பள்ளிகள் மூலம் தலைமையாசிரியர்களுக்கான பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதில் உள்ள நடைமுறைசிரமங்கள் குறித்து இம்மாநாட்டில் நமது கருத்துகளை எடுத்துரைக்கலாம். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து உதவிக்கு மொழிபெயர்ப்பாளர்களை அனுப்பஇருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த விவகாரத்தில் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, ‘‘கல்விக்கொள்கை தொடங்கி பல்வேறு செயல்பாடுகளில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. விமர்சனங்களை தவிர்க்க உடன் ஆங்கிலத்தையும் சேர்த்து கொள்கிறது.
சமீபத்தில் சீன அதிபரும் நமது பிரதமரும் சந்தித்தபோது மொழிப்பெயர்ப்பாளரின் உதவியோடுதான் பேசிக்கொண்டனர். ஒரு மனிதனின் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் தாய்மொழியில்தான் சிறப்பாக வெளிப்படும். எனவே, தமிழ் உட்பட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தந்து மாநாட்டை நடத்த வேண்டும். அப்போதுதான் கற்றல், கற்பித்தல் பணிகள் மேம்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT