

ஸ்ரீவில்லிபுத்தூர்
குழந்தை சுஜித் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது எனவும், தனிநபர் இடத்தில் பெற்றோர்களின் அஜாக்கிரதையால் நடந்தது எனவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றுவரும் மனவாள மாமுனிகள் ஜென்ம நட்சத்திர திருவிழாவையொட்டி அதில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும். இடைத் தேர்தலைப் போன்றே அதிமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றி பெறும்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை சில எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அதுபோன்று எந்த ஒரு தனி விருப்பமும் கட்சியில் கிடையாது. தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பதே முறையாக இருக்கிறது.
குழந்தை சுஜித் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது. தனிநபர் இடத்தில் பெற்றோர்களின் அஜாக்கிரதையால் நடந்தது. எனவே, குழந்தை மீட்பு பிரச்சினையில் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது" என்றார்.
மேலும், புத்தாண்டு பிறப்பதற்குள் பத்திரிகையாளர் நல வாரியம் குழு அமைத்து அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
சிறப்பு காட்சிகளுக்கு தனிக் கட்டணம்..
தொடர்ந்து பேசிய அமைச்சர், புது படத்தை சிறப்புக் காட்சி என்ற பெயரில் அரசு நிர்ணயிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு 2, 3 காட்சிகள் ஒளிபரப்புவதால் அதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும், இனி அது நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்பு காட்சிகளுக்கு தனிக் கட்டணம் வசூலித்து அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.