தீபாவளியின்போது அதிக கட்டணம் வசூலிப்பு: 2,169 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.45.28 லட்சம் அபராதம்

தீபாவளியின்போது அதிக கட்டணம் வசூலிப்பு: 2,169 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.45.28 லட்சம் அபராதம்
Updated on
1 min read

சென்னை

தீபாவளி பண்டிகையின்போது அதிக கட்டணம் வசூலித்த 2,169 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.45 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்கு வரத்துத் ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையின்போது அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க 111 சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வுகள் மேற்கொண்டோம். ஆம்னி பேருந்துகளில் பாதுகாப்பு விதிமுறை மீறல், அதிகக் கட்டணம் வசூல் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.

9,712 பேருந்துகள் ஆய்வு

அதன்படி, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, விழுப்புரம், விருதுநகர், வேலூர் உட்பட பல்வேறு இடங்களில் மொத்தம் 9,712 ஆம்னி பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், சிறு குறைபாடுகள், அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக 2,169 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ரூ45 லட்சத்து 28 ஆயிரத்து 687 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

மேலும், இந்த ஆம்னி பேருந்துகளுக்கு விளக்கம் கேட்டு சோதனை அறிக்கை அனுப்பியுள்ளோம். பதில் வந்த பிறகு, ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போக்கு வரத்துத் ஆணையரக அதிகாரிகள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in