Published : 02 Nov 2019 07:50 AM
Last Updated : 02 Nov 2019 07:50 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற்றர.முத்தமிழ்ச்செல்வன், வி.நாராயணன் ஆகிய இருவரும் பேரவைத் தலைவர் பி.தனபால் முன்னிலையில், எம்எல்ஏக்களாக நேற்று பதவியேற்றனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளுக்கு கடந்தஅக்.21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகசார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி வி.நாராயணனும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், இருவரும் சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் முன்னிலையில் எம்எல்ஏக்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னதாக, நேற்று காலை 8.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச்செல்வன், வி.நாராயணன் மற்றும் நிர்வாகிகள், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றனர்.

அங்கு மலர்வளையம் மற்றும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து வணங்கினர். அதன்பின் அனைவரும், எம்ஜிஆர் நினைவிடம் சென்று, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பின், காலை 9.30 மணிக்கு அனைவரும் தலைமைச் செயலகம் வந்தனர். 9.45 மணிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அறையில் அவரது முன்னிலையில், நாங்குநேரி தொகுதியில் தேர்வான வி.நாராயணன், விக்கிரவாண்டியில் தேர்வான ர.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், எம்பி., அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை மற்றும் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சரோஜா, ராஜலட்சுமி உள்ளிட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x