Published : 01 Nov 2019 06:52 PM
Last Updated : 01 Nov 2019 06:52 PM

சென்னையில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது பூக்கடை போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி அதன் அடிப்படையில் மீண்டும் பணியிடம் வழங்க வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வந்தன.

தமிழகம் முழுதும் நடந்த இப்போராட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவ மனையில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் போரட்டத்தில் கலந்துக்கொண்டனர். வாயிலின் முன் திரண்டு உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்திவந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு வந்தால் பேச்சுவார்த்தை, இல்லாவிட்டால் பிரேக் இன் சர்வீஸ், பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என அமைச்சர் எச்சரித்தார். மறுநாள் பிரேக் இன் சர்வீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இன்று காலை இறுதிக்கெடு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, இன்று மருத்துவர்கள் பணிக்குத் திரும்பினர்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ. திருநாவுக்கரசு மருத்துவர்கள் மீது கடந்த 28-ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் போராட்டம் நடத்திய மருத்துவர்கள்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐபிசி பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 341 (செயல்பட விடாமல் தடுப்பது), 290 ( பொது தொல்லை கொடுத்தல்) மற்றும் 3- tamilnadu Medicare service persons and Medicare service institutions (prevention of violence and damage or loss of property) act 2008. தமிழ்நாடு மருத்துவ சேவை நபர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு ஆகியவற்றைத் தடுப்பது) சட்டம் 2008. ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு ப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கை தற்போது உள்ள இணக்கமான சூழ்நிலையில் எப்.ஐ.ஆர் (freeze)நிறுத்தி வைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீக்கப்படவில்லை (quash). இதை முற்றிலும் நீக்கும் நடவடிக்கையை மருத்துவர்கள் சங்கம் பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தும் என தெரிகிறது.

இதனிடையே போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களுக்கு எதிரான பணிமுறிவு (break in service) நடவடிக்கை திரும்ப பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் உறுதி அளித்தப்படி தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்று என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கோரிக்கையை ஏற்று பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x