Published : 01 Nov 2019 02:32 PM
Last Updated : 01 Nov 2019 02:32 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு :  2 குற்றவாளிகளுக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (24) ஆகியோருடன் சேர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை மடக்கி அவர்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்ததாகப் புகார்கள் எழுந்தன.

அந்த வீடியோவைக் கொண்டு அந்தப் பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர்களிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றை பறிப்பதைத் தொழிலாகச் செய்து வந்ததாக புகார் எழுந்தது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்ததாக மேற்கண்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசு பரிந்துரைத்தது. சிபிஐ விசாரணையை ஏற்கும்வரை சிபிசிஐடி விசாரணை தொடரும் என கூறப்பட்டது.

கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையில் 4 பேர் மீதான குண்டர் சட்டம் போடப்பட்டது சரிதான் என உறுதி செய்தது அறிவுரைக் கழகம்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறப்பித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

திருநாவுக்கரசு, சபரிராஜன் தவிர வசந்த குமார், சதீஷ் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x