Published : 01 Nov 2019 11:27 AM
Last Updated : 01 Nov 2019 11:27 AM
சென்னை
மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதால், பணிமுறிவு உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை நிரப்புதல், பட்ட மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு, பட்ட மேற்படிப்பு அரசு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த அக்.25 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப இன்று (நவ.1) காலை வரை அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமியும், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று காலையில் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படுவதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "முதல்வரின் கோரிக்கையை ஏற்று இன்று காலை வரை பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் முதல்வரின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்வரின் ஆணைப்படி அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பணிமுறிவு உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. முதல்வர் உறுதியளித்தபடி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்கும்," என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT