Published : 31 Oct 2019 08:03 PM
Last Updated : 31 Oct 2019 08:03 PM
மதுரை
தான் நீதிமன்றத்தில் இருப்பதை நண்பருக்குத் தெரிவிப்பதற்காக ஆர்வமாக நீதிமன்றத்தைப் போட்டோ எடுத்த இளைஞர், மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியேறினார்.
மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குண்டர் சட்டத்தில் சிறையிலிருக்கும் தனது சகோதரரை விடுவிக்கக்கோரும் ஆட்கொணர்வு மனு விசாரணையைப் பார்வையிடுவதற்காக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் அமர்வுக்கு வந்திருந்தார். அவர் நீதிமன்றத்தில் பார்வையாளர்களுக்கான பகுதியிலிருந்தார்.
உணவு இடைவேளை முடிந்து நீதிமன்றம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் நீதிமன்ற அறைக்குள் இருந்த அந்த இளைஞருக்கு, அவர் நண்பர் தொடர்ந்து தொலைப்பேசி செய்து கொண்டிருந்துள்ளார். இவர் நண்பருக்கு வாட்ஸ் ஆப்பில், தான் நீதிமன்ற அறைக்குள் இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் தகவல் அனுப்பியுள்ளார்.
இதை நம்பாத அவரது நண்பர் மீண்டும் தொலைப்பேசி செய்து, ‘நீ நீதிமன்ற அறைக்குள் இருப்பதாகப் பொய் சொல்கிறாய். நம்பமாட்டேன்’ என்று சொல்லிச் சண்டைபோட்டுள்ளார்.
இதனால் நீதிமன்ற அறைக்குள் இருப்பதை நிரூபிக்க, நீதிமன்ற அறையை செல்போனில் போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் நண்பருக்கு அனுப்பினார். போட்டோ எடுக்கும் போது பிளாஷ் அடித்தது.
இதைப் பார்த்ததும் நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் வந்து அந்த இளைஞரின் செல்போனை பறித்துச் சென்றனர். அப்போது ‘தான் நீதிமன்றத்தில் இருப்பதை நண்பருக்கு நிரூபிப்பதற்காகப் போட்டோ எடுத்ததாக’ தெரிவித்தார்.
பின்னர் ‘இனிமேல் இதுபோன்ற தவறுகள் செய்யமாட்டேன்’ என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து செல்போனை வாங்கிச்சென்றார்.
கி.மகாராஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT