Published : 02 Jul 2015 07:57 AM
Last Updated : 02 Jul 2015 07:57 AM
கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த 406 பேருக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்தத் தொகுதி, எதிர்க்கட்சி யினரின் தொகுதி என்பதால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதிலும் நலத்திட்ட உதவி கள் வழங்குவதிலும் சுணக்கம் உள்ளது.
கொளத்தூர் தொகுதியில் தகுதியான 406 பேர் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் கோரி மனு செய்துள்ளனர். அதன்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற நலத்திட்டங்களை வழங்குவதில் பாகுபாடும், பாரபட்சமும் காட்டப்படுகிறது.
தகுதியானவர்களுக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், பெரம்பூர் வட்டாட்சியர் போன்றோரிடம் மனு கொடுத்தேன். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கடந்த மே 28-ம் தேதி நான் அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT