Published : 31 Oct 2019 02:26 PM
Last Updated : 31 Oct 2019 02:26 PM
சென்னை
மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சரும் அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு 'ஃபோக்டா' பல்வேறு கோரிக்கைகளை வைத்து கடந்த 25-ம் தேதி முதல் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தி வருகிறது. தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல வடிவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உயிர் காக்கும் அவசர சிகிச்சை தவிர மற்ற பணிகளைப் புறக்கணித்து நடைபெறும் இந்த வேலைநிறுத்தம் இன்று (அக்.31) 7-வது நாளாகத் தொடர்கிறது. போராட்டத்தின் ஒருகட்டமாக உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் - அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் - நன்னடத்தைச் சான்றிதழில் கை வைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுவது கொடுங்கோன்மை!
மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும," என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT