

சென்னை
அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தமிழ் வழியில் படித்தவர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பாடங் களுக்கு 1,300 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுக்க, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அத்தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அதில் குளறுபடிகள் நடந்திருப் பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய பட்டியல் கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தவர் களில் 38 ஓவிய ஆசிரியர்களின் பெயர்கள் இப்போது நீக்கப்பட்டுள் ளன. அவர்களில் 33 பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மட்டுமின்றி, தமிழ் வழியில் படித்த 37 பேர் உள்ளிட்ட 76 ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற் கான காரணம் தெரிவிக்கப் படவில்லை.
இதேபோல் இசை, தையல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக் கான சிறப்பாசிரியர்கள் நியமனத்திலும் குளறுபடிகள் நடந்திருப்ப தாக கூறப்படுகிறது.
ஓவியம் உள்ளிட்ட பாடங் களுக்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் நிலவும் குளறுபடி களுக்கு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வழங்க வேண்டிய 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படாததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழை வளர்க்க வேண்டும், தமிழ் வழியில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று ஒருபுறம் கூறிக் கொண்டு, மறுபுறம் இதுபோன்று அநீதிகள் இழைக்கப்பட்டால் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க முடியாது. தமிழை வளர்க்கவும் முடியாது என்பதை உரியவர்கள் உணர வேண்டும்.
அரசு தேர்வுத் துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய அமைப்புகளில் இயக்குநர் நிலையில் உள்ள அதிகாரிகள் மட்டத்தில்தான் குழப்பங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அதில் தெரியவரும் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.