

சென்னை
குழந்தை சுஜித்தைக் காப்பாற்ற முடியாதது சோகம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.29) தன் ட்விட்டர் பக்கத்தில், "82 மணிநேர போராட்டத்திற்கு பிறகும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை; குழந்தை இறந்து விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரை அனைவரும் கடுமையாக போராடினார்கள். பல்வேறு தரப்பும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது பெரும் சோகம் தான். இயற்கையும் சதி செய்தது. இயற்கையை வெல்ல முடியாதது வேதனையளிக்கிறது.
சுஜித்தை மீட்பதில் உள்ள சிக்கல்களையும், இடர்பாடுகளையும் அனைவரும் அறிவார்கள். அவற்றையும் கடந்து அதிசயம் ஏதேனும் நிகழும்; அச்சிறுவன் உயிருடன் மீண்டு வருவான் என நம்பினோம். அது நடக்காதது சிறுவனின் குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரிழப்பு தான்.
சுஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை குறை கூற முடியாது. ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாதது சோகமே. இனியும் இப்படி ஒரு சோகம் நிகழாத அளவுக்கு இத்தகைய சூழல்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களும், கருவிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்," என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.