Published : 29 Oct 2019 09:46 AM
Last Updated : 29 Oct 2019 09:46 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.456 கோடி மது விற்பனை: கடந்த ஆண்டை விட அதிகம்

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.456 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் வார நாட்களில் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடியும் வார கடைசி நாட்களில் ரூ.85 கோடி முதல் ரூ.95 கோடியும் விற்பனை நடைபெறும். பண்டிகை காலங்களில் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை கொண்டாடும் வகையில், கடந்த 25-ம் முதல் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. கடந்த 26-ம் தேதி மற்றும் தீபாவளி பண்டிகையான 27-ம் தேதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்களின் கூட்டம் அலைமோதியது.

இதனால், கடந்த 25-ம் தேதிரூ.100.65 கோடி, 26-ம் தேதி ரூ.183.18 கோடி, 27-ம் தேதி ரூ.172.31 கோடி என மொத்தம் 3 நாட்களில் ரூ.456.15 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த தீபாவளி பண்டிகையின்போது, சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x