Published : 29 Oct 2019 09:30 AM
Last Updated : 29 Oct 2019 09:30 AM

வீட்டு சிலிண்டர்களில் கசிவு, எடையை மின்னணு முறையில் பரிசோதிக்க முடிவு: எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்

சென்னை

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் கசிவு, எடை ஆகியவற்றை மின்னணு முறையில் பரிசோதிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 2.35 கோடி வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.

வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, சிலிண்டரின் மேல் உள்ள சீல், வாஷர் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை வாடிக்கையாளர் முன் பரிசோதித்துக் காட்டுவதுடன், சிலிண்டரை எடையும் போட்டுக் காட்ட வேண்டும். ஆனால், ஊழியர்கள் யாரும் இப்பணியை முறையாகச் செய்வதில்லை. இதனால், சிலிண்டர்களில் எரிவாயு கசிவு ஏற்படுவதாகவும் எடை குறைவாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஏராளாமான புகார்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வருகின்றன.

இதையடுத்து, மின்னணு முறையில் சிலிண்டர்களை பரிசோதித்தப் பிறகு அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மின்னணு எடை கருவிகள் மூலம், சிலிண்டர்களின் எடை துல்லியமாகத் தெரியும். அத்துடன், சிலிண்டரில் கசிவு ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்த மின்னணு கருவி மூலம் பரிசோதித்துப் பார்க்கப்பட உள்ளது.

இதற்கான கருவி சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு வழங்கப்படும்,இப்புதிய நடைமுறை வரும் நவம்பர் முதல் அமலுக்கு வர உள்ளது. அத்துடன், சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்ய வரும்போது அவற்றின் சீல், எடை போன்றவற்றை சரிபார்த்து வாங்கும்படி, வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x