Last Updated : 27 Oct, 2019 09:13 AM

 

Published : 27 Oct 2019 09:13 AM
Last Updated : 27 Oct 2019 09:13 AM

சீனப் பட்டாசுகள் வருகை, உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளால் கடந்த 4 ஆண்டுகளாக சரிவை சந்திக்கும் சிவகாசி பட்டாசுகள்: 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

உடல் நிறம் மாறினாலும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் பட்டாசுக்கான மருந்து கலக்கும் தொழிலாளர்கள்.

சிவகாசி

ஒருநாள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக, ஓராண்டு முழுவதும் உழைக்கும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்து வருகிறது சிவகாசி பட்டாசுத் தொழில்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது பட்டாசுத் தொழில். சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முகநாடார் ஆகியோர் முதன்முதலாக சிவகாசியில் பட்டாசு ஆலையைத் தொடங்கினர். வறட்சி,விவசாயமின்மை போன்ற காரணங்களால் அனைத்துத் தரப்பினரும் உற்பத்தித் தொழிலில் ஈடுபடுவதால் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம்தோன்றின. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசுஆலைகள் இயங்கி வருகின்றன.

பட்டாசு ஆலைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், பட்டாசு தொழிற்சாலைகளின் உபதொழிலாகச் செயல்படும் காகித ஆலைகள், அச்சுத் தொழில் சார்ந்தோர், வாகனபோக்குவரத்து, சுமைப் பணித் தொழிலாளர்கள், வெடி பொருள்மருந்து மற்றும் ரசாயன உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீத தேவையை சிவகாசி மற்றும் அதனைச் சுற்றிஉள்ள பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. ஆனாலும் சீனப்பட்டாசுகளின் ஆதிக்கம் அதைத்தொடர்ந்து பட்டாசு வெடிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசுத் தொழில் சரிவை சந்தித்து வருகிறது.

இதனால் பட்டாசுத் தொழில் மட்டுமின்றி அத்தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறும்போது: ‘‘விநாயகர் சதுர்த்தி, தசரா போன்றபண்டிகைகளுக்காக வட மாநிலங்களிலிருந்து ஆர்டர்கள் குவியும். ஆனால், சீனப் பட்டாசுகள் ஊடுருவியதால் சிவகாசி பட்டாசுக்கான ஆர்டர்கள் குறையத் தொடங்கியன. இதனால் பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் கடந்த 4 ஆண்டுகளாகக் குறைந்தது. இந்த ஆண்டு உச்சநீதிமன்ற வழக்கு காரணமாகவும் வட மாநிலங்களில் பட்டாசு ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும், பட்டாசு தயாரிப்பதற்கும் வெடிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசுத் தொழில் நசுக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் சீனப் பட்டாசுகளை வாங்காமல், நம்நாட்டில் தயாராகும் பட்டாசுகளை மட்டுமே வாங்கி சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் வாழ்வு அளிக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x