

திருச்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாராணி. இவர்களது மகன் சுஜித் வில்சன் (2). பிரிட்டோ ஆரோக்கியராஜ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள வயலில் பாசனத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளார். ஆனால், தண்ணீர் கிடைக்காததால் அந்த ஆழ்துளைக் கிணற்றை மூடிவிட்டார். கைவிடப்பட்ட அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஆழ்துளைக் கிணற்றில் மூடியிருந்த மண் உள்வாங்கியது. அது தெரியாமல் அந்தப் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன் எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். இதை கண்ட கலாராணியின் அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர்.
தகவல் அறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில் மணப்பாறை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குழந்தை அவ்வப்போது கைகளை அசைத்த நிலையில் இருப்பதால், குழாய் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும் கேமரா மூலம் குழந்தையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாறை குறுக்கீடு
ஆழ்துளைக் கிணற்றில் 26 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ள நிலையில், பக்கவாட்டில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டியபோது சுமார் 12 அடி ஆழத்தில் பாறை குறுக்கிட்டதால் பிரத்யேக கருவிகள் மூலம் அதை உடைக்கும் பணி நடைபெற்றது. 28 அடி ஆழம் வரை பக்கவாட்டில் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. குழந்தை பயந்துவிடாமல் இருப்பதற்காக அவரது பெற்றோரும், உறவினர்களும் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இருந்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
ஆழ்குழாய் குழியில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரத்யேக குழுவினர் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நாமக்கல்லைச் சேர்ந்த குழுவினர் முயன்ற நிலையில், அவர்களின் கருவியை ஆழ்துளைக் கிணற்றில் இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, இரவு 9 மணிக்கு மேல் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர் கண்டறிந்துள்ள நவீன ரோபோ கருவியைப் பயன்படுத்தி குழந்தையை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது.இரவை தாண்டி காலையில் விடிந்த நிலையில் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது