Published : 26 Oct 2019 08:07 AM
Last Updated : 26 Oct 2019 08:07 AM

ரூ.2000 நோட்டுகள் குறித்த வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

சென்னை

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடும் என சமூகவலைதளங்களில் பரவிவரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதை முன்னிட்டு, தற்போது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடும்.

எனவே, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய்நோட்டுகளை ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே 10 தினங்களுக்குள் மாற்ற முடியும். அதன் பிறகு மாற்ற முடியாது. எனவே இப்போதி ருந்தே பொதுமக்கள் 2 ஆயிரம்ரூபாய் நோட்டுகளை மாற்றி விடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவ்வாறு அறிமுகப்படுத்தினாலும் தற்போது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடாது. அதுகுறித்து மத்திய அரசு முன்பு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது போல அறிவித்தால் தான் அவை செல்லாததாகும். அதுவரை அவை புழக்கத்தில் இருக்கும். எனவே, இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x