Last Updated : 25 Oct, 2019 03:17 PM

 

Published : 25 Oct 2019 03:17 PM
Last Updated : 25 Oct 2019 03:17 PM

தீபாவளி விபத்துக்களை எதிர்கொள்ள தென் மாவட்டங்களுக்கு தனி கட்டுப்பாட்டு அறை அமைப்பு: தீயணைப்புத் துறை தகவல்

தேனி

தீபாவளி விபத்துக்களை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகரின் முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகை நாளைமறுதினம் (அக்.27) கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையில் பட்டாசு வெடித்தல் முக்கிய நிகழ்வாக இடம் பெற்று வருகிறது. உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கையில் மகிழ்வாக இருந்தாலும் சிறிய கவனக்குறைவு பெரியஅளவிலான விபத்துக்களை ஏற்படுத்தி விடுகிறது. எனவே தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி, கல்லூரிகளில் செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளிக்காக பல்வேறு முன்னேறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி தீயணைப்பு ஊர்திகள், வீரர்கள், மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால் தீவிபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடன் தகவல் தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தென்மண்டல அளவிலான தொடர்பு எண்ணையும் தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி தேனி(04546) 252699, விருதுநகர்(04362) 243666, சிவகங்கை(04575)240301, மதுரை(0452) 2335399, ராமநாதபுரம் (04567) 230094, தூத்துக்குடி(0461) 2326501, திருநெல்வேலி (0462) 2572099, நாகர்கோயில் (0465) 2276331 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் செ.காந்திராஜன் செய்தி அறிக்கையில், "தீபாவளியை முன்னிட்டு தென்மண்டலங்களில் இந்த ஆண்டு 491 பட்டாசு கடைகளுக்கு தடையின்மைச் சான்றுகள் தீயணைப்புத்துறையால் வழங்கப்பட்டு இருக்கிறது. அதிக மக்கள்தொகை உள்ள இடங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென்மண்டலத்தைப் பொறுத்தவரை தீபாவளியின் போது ஏற்படுகின்ற விபத்துக்களை எதிர்கொள்ள தீயணைப்பு வண்டிகள் மற்றும் செயற்கருவிகளோடு நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைப் பொறுத்தளவில் விளக்குத்தூண், தேர்முட்டி(கீழமாசிவீதி), மின்வாரிய அலுவலகம் அருகில், சிம்மக்கல், ஓபுளாபடித்துறை, டிஎம்.கோர்ட்

தேனி- பங்களாமேடு, விருதுநகர்-ஆர்ஆர்.நகர், அரசுப்பொருட்காட்சி(சிவகாசி), தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, அய்யனார் கலைக்கல்லூரி, திருநெல்வேலி-வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், புதிய பேருந்துநிலையம், திருநெல்வேலி டவுன், அம்பாசமுத்திரம் பேருந்துநிலையம் அருகில், நாங்குனேரி பள்ளிக்கூடம் அருகில், தென்காசி காசிவிசுவநாதர் கோயில், திருச்செந்தூர் பிரிவு சாலை, தூத்துக்குடி-தெற்கு காவல்நிலையம், பெர்ணான்டஸ் சிலை ஆகிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனை, வழிபாட்டு தளங்கள், பெட்ரோல்பங்க், எரிவாயு குடவுன் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. விபத்தில்லா, பாதுகாப்பான தீபாவளி கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x