Last Updated : 25 Oct, 2019 01:29 PM

 

Published : 25 Oct 2019 01:29 PM
Last Updated : 25 Oct 2019 01:29 PM

’பிகில்’ வெளியான திரையரங்கில் நடிகர் விஜய்க்கு  சிலை அமைக்கக் கோரி வழக்கு

மதுரை

‘பிகில்’ திரையிடப்பட்டுள்ள திரையரங்கு வளாகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகுச் சிலை அமைக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணையை நவ. 8-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். திண்டுக்கல் சின்னாளபட்டி ஸ்ரீ லட்சுமி திரையரங்கில், பிகில் வெளியாகியுள்ளது.

இதையொட்டி திரையரங்கு வளாகத்தில் நடிகர் விஜய்க்கு இரண்டரை அடி உயர மெழுகுச் சிலை வைத்தும், டிரம் அடித்துக் கொண்டாடவும் விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் போலீஸார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். எனவே திரையரங்கு வளாகத்தில் அக்டோபர் 27 வரை விஜய் மெழுகு சிலை அமைக்கவும், டிரம் அடித்து கொண்டாடவும் அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவில் திண்டுக்கல் ஸ்ரீ லட்சுமி திரையரங்கின் உரிமையாளரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x