Published : 25 Oct 2019 11:53 AM
Last Updated : 25 Oct 2019 11:53 AM

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்

நாகப்பட்டினம்

கணவர் இறந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி மயங்கி விழுந்து இறந்தார்.

நாகை மாவட்டம் நாகூர் பெருமாள் கீழ வீதியைச் சேர்ந்தவர் காமராஜ்(70). டெய்லரான இவர் தனியே கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மாலா(65). இவர்களுக்கு கண்ணன்(42), சத்தியசீலன்(38) ஆகிய மகன்கள், பாரதி, பவானி ஆகிய மகள்கள் உள்ளனர். கண்ணன் சென்னையில் வசித்து வருகிறார். பாரதி, பவானி ஆகியோர் திருமணம் ஆகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சத்தியசீலன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தைப்பதற்காக நிறைய துணிகள் வந்திருந்ததால் நேற்று முன்தினம் இரவு காமராஜ் கடையில் துணிகளைத் தைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.

உடனடியாக அவரை நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மாலாவும், சத்தியசீலனும் அழைத்து வந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி காமராஜ் இறந்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே இருந்த மாலா, தன் கணவர் இறந்த தகவலை கேட்டவுடனே மயங்கி விழுந்தார். உடனே, பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்தது நாகூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x