Published : 25 Oct 2019 11:42 AM
Last Updated : 25 Oct 2019 11:42 AM

எழுத்தாளர் கி.ரா. மீதான வன்கொடுமை வழக்கு ரத்து

மதுரை

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் (97), தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, ஆதி திராவிடர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கி.ரா. மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கி.ரா. உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் கி.ரா. பிரபல எழுத்தாளர். பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். அண்மையில் அவரது மனைவி மரணம் அடைந்தார்.

கி.ரா. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். கருத்துரிமை தொடர்பான வழக்குகளில் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு பெருமாள் முருகன் வழக்கில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பிறப்பித்த உத்தரவை நீதித்துறை நடுவர்கள் படித்துப் பார்க்க வேண்டும். கி.ரா மீது வன்கொடுமை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய போதிய முகாந்திரம் இல்லை. எனவே, கி.ரா. மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x