Published : 25 Oct 2019 11:26 AM
Last Updated : 25 Oct 2019 11:26 AM

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் ஜெயகோபாலின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில்அதிமுக பிரமுகர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதனின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண விழாவுக்காக சாலையின் மையத் தடுப்பில் வைத்திருந்த பேனர் சரிந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதுதொடர்பாக பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு போலீஸார், பரங்கிமலை போக்குவரத்து போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கில் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அருள் ஆஜராகி,‘‘ஜெயகோபால் எங்கும் தலைமறைவாகவில்லை. சிகிச்சைக்காக கேரளா சென்றதால்தான் உடனடியாக விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை’’ என்றார்.

‘‘அரசியல் செல்வாக்கு மிக்கஇந்த இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்று எதிர்ப்பு தெரிவித்து, சுபயின் தந்தை ரவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி.முத்துவிசாகன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதி அறிவித்ததும், மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x