Last Updated : 25 Oct, 2019 11:05 AM

 

Published : 25 Oct 2019 11:05 AM
Last Updated : 25 Oct 2019 11:05 AM

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: வறண்டு கிடந்த நீர்பிடிப்புப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கத் தொடங்கியது

ஆண்டிபட்டி

வைகை அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதுடன், நீர்வரத்தும் அதிகமாக உள்ளது.

இதனால் இதுவரை வறண்டு கிடந்த கடைமடை நீர்பிடிப்புப்பகுதிகளில் தண்ணீர் தேங்குவதுடன் ஆக்கிரமிப்பு விளைநிலங்களும் மூழ்கத் தொடங்கியுள்ளன.

ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. மழைக்காலங்களில் வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீரைத் தேக்கிவைத்து பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்தும் நோக்கில் இங்கு 1959-ம் ஆண்டு அணை கட்டப்பட்டது.

இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள ஏராளமான சிற்றாறுகளில் இருந்து வரும் நீர் மற்றும் மூலவைகை போன்றவற்றின் மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து உள்ளது.

கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் நீர்வரத்து இன்றி வைகை அணையின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்தது. இந்நிலையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாய் உயர்ந்துள்ளது.

71 அடி உயரம் கொண்ட அணையின் நீர் அளவு தற்போது 64 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 866 ஆகவும், வெளியேற்றம் ஆயிரத்து 190 ஆகவும் உள்ளது.

அணையின் மொத்த கொள்ளவு 6ஆயிரத்து 91மில்லியன் கனஅடி ஆகும். இதில் நேற்று 4 ஆயிரத்து 262 அடி அளவிற்கு நீர் சேகரமாகி உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் விரைவில் அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது.

இதனால் பல மாதங்களாக வறண்டிருந்த அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நீர் தேங்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக காமக்காபட்டி, சருத்துப்பட்டி, ஜல்லிப்பட்டி, சொக்கத்தேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை ஒட்டி நீர் தேங்கி வருகிறது.

அணைக்கு அருகில் உள்ள நீர்பிடிப்புப்பகுதியில் நீர் வெகுவாய் சேகரமாகி உள்ளதால் குன்னூரைக் கடந்து செல்லும் வைகைஆறு, அணையில் பின்பக்கம் உள்ள நீர்பிடிப்புப்பகுதியில் இணைந்து வருகிறது.

இதனால் அணையின் கடைசியில் உள்ள நீர்பிடிப்புப்பகுதியில் தற்போது நீரின் பரப்பளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இங்கு ஏராளமான ஆக்கிரமிப்பு விளைநிலங்கள் உள்ளன. இதில் தண்ணீர் புகுந்து வருவதால் அவரை, தக்காளி, கத்தரி உள்ளிட்ட பயிர்கள் மூழ்கி வருகின்றன.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆண்டின்பல மாதங்கள் நீரின்றி இருப்பதால் சிலர் இதில் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது அணை முழுக்கொள்ளளவை எட்டும் அளவிற்கு உள்ளதால் இந்த விளைநிலங்கள் மூழ்கத் துவங்கியுள்ளன. இவற்றை கண்காணித்து ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x