Published : 07 Jul 2015 08:01 AM
Last Updated : 07 Jul 2015 08:01 AM
பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் இளைஞர் ஷமீல்அஹ்மது உயிரிழப்பால் ஜூன் 27-ம் தேதி ஆம்பூரில் கலவரம் வெடித்தது. இதில் போலீஸாரும் பொதுமக்களும் தாக்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் டவுன் போலீஸார், நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கலவரம் நடந்த பகுதிகளில் மக்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இதன் மூலம் ஆம்பூரில் மீண்டும் வன்முறை ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என போலீஸார் கருதினர். அவர்களது கோரிக் கையின்பேரில், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளுக்கு ஜூன் 6 நள்ளிரவு 12 மணி முதல் வரும்15-ம் தேதி வரை (10 நாட்களுக்கு) 144 தடை உத்தரவு பிறப்பித்து திருப்பத் தூர் வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன் உத்தரவிட்டார்.
இதன்மூலம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்துவது, பொதுமக்களை சந்தித்துப் பேசுவது, 4 பேருக்கு மேல் கூட்டமாக நிற்பது கூடாது என்பன உள்ளிட்ட நடை முறைகள் அமல்படுத்தப் பட்டன.
காவல் ஆய்வாளர் தலைமறைவு
ஷமீல் இறந்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இறந்த ஷமீலின் உறவினர்கள், பள்ளிகொண்டா போலீஸார், ஆம்பூர் அரசு மருத்துவர் ஆகியோரிடம் விசாரணை நடந்துவருகிறது. பள்ளிகொண்டா வில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் தங்கியிருந்தார். அந்த வீட்டில்தான் ஷமீல் அஹ்மதுவை அடைத்து வைத்து தாக்கியதாக புகார் கூறப்பட்டது. எனவே, அந்த வீட்டை சிபிசிஐடி போலீஸார் சோதனையிட முடிவு செய்தனர்.
அதன்படி, சிபிசிஐடி டிஎஸ்பி ஆனந்தகுமார், ஆய்வாளர்கள் கருணாநிதி, அன்புக்கரசி மற்றும் வேலூரில் இருந்து சென்ற வருவாய்த்துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் மார்ட்டின் பிரேம்ராஜ் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் இரண்டரை மணி நேரம் சோதனையிட்டனர்.
விசாரணைக்காக திங்கள்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் மார்ட்டின் பிரேம்ராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று மாலை 4 மணிவரை அவர் ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT