ஸ்டாலின் கனவு என்றும் பலிக்காது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஸ்டாலின் கனவு என்றும் பலிக்காது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Updated on
1 min read

திருப்பத்தூர்

கனவுலகத்தில் சஞ்சரிக்கும் ஸ்டாலின் கனவு என்றும் பலிக்காது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தையொட்டி, அவர்களது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். திமுக கூட்டணியிடம் இருந்த 2 தொகுதிகள் எங்களிடம் வந்துள்ளன. மக்கள் செல்வாக்கு மூலமே வெற்றி பெற்றுள்ளோம். இது அரசின் மீதான மக்களின் நிலைப்பாட்டை காட்டுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் வருமா? வராதா? என்ற சொல்லுக்கே இடமில்லை. கண்டிப்பாக டிசம்பருக்குள் தேர்தல் நடைபெறும். அதிலும் அதிமுகவே வெற்றி பெறும்.

அதிமுகவில் இருந்து தினகரன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் நீக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து பொதுக்குழுவைக் கூட்டிதான் முடிவு செய்யப்படும்.

ஸ்டாலின் தேர்தலில் திமுக வெற்றிபெரும் எனக் கூறியது, இன்னும் அவர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

அவர் கனவுலகில் சஞ்சரித்து வருகிறார் . அவரது கனவு என்றும் பலிக்காது. பாஜக கூட்டணி தொடரும். இரு அரசுகளும் மக்களுக்கு நன்மைகளை செய்து வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in