பொய் வணிகர் ஸ்டாலின்; பதற்றத்தில் உளற வேண்டாம்: முரசொலி நிலத்துக்கு பத்திரம் உண்டா? இல்லையா? - ஜி.கே.மணி கேள்வி

ஜி.கே.மணி: கோப்புப்படம்
ஜி.கே.மணி: கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை

ஸ்டாலின் பதற்றத்தில் உளற வேண்டாம் என, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.மணி இன்று (அக்.24) வெளியிட்ட அறிக்கையில், "முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணை நடத்தப் போவதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதற்கு முன் முரசொலி நிலம் குறித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆணையிட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பதற்றம் மற்றும் நடுக்கத்தின் காரணமாக இந்த விஷயத்தில் ஏற்கெனவே கூறியதையே திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும், மீண்டும் உளறிக் கொண்டிருக்கிறார்.

முரசொலி விஷயத்தில் பதற்றப்படுவதற்கோ, உண்மையை அம்பலப்படுத்தி விட்டார் என்ற கோபத்தில் ராமதாஸ் மீது வசை மாறி பொழிவதற்கோ எந்தத் தேவையும் இல்லை. முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1985 ஆம் ஆண்டில் பெறப்பட்ட பட்டா ஒன்றை வெளியிட்டார். 1960-களில் பின்னாளில் கட்டப்பட்ட முரசொலி கட்டிடம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லையென்றால், முரசொலி நிலம் தொடர்பான 1924 ஆம் ஆண்டின் மூல ஆவணம் முதல் 1960-களில் முரசொலி நிலம் வாங்கப்பட்டதற்கான நிலப்பதிவு ஆவணம் வரை அனைத்தையும் தானே மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்க வேண்டும் என்று ராமதாஸ் எதிர்க்கேள்வி எழுப்பியிருந்தார்.

ராமதாஸ் எழுப்பிய வினாவை கடந்த 20 ஆம் தேதி நானும் எழுப்பியிருந்தேன். ராமதாஸைத் தொடர்ந்து பிற கட்சித் தலைவர்களும், மொத்த தமிழகமும் இதே கேள்வியை மீண்டும், மீண்டும் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். பாஜக நிர்வாகி ஆர். சீனிவாசன் இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் நேர்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? முரசொலி நிலம் குறித்த 1985 ஆம் ஆண்டின் பட்டாவை எவ்வளவு வேகமாக வெளியிட்டாரோ, அதே வேகத்தில் அந்த நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டு, முரசொலி நிலம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், ராமதாஸ் கேள்வி எழுப்பி பல நாட்களாகியும் அதற்கு பதிலளிக்க முடியாத ஸ்டாலின், குழந்தைகள் விளையாடுவதைப் போல அரசியலில் இருந்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விலக ஒப்புக்கொண்டால் மூல ஆவணத்தைக் காட்டுவதாகக் கூறி வருகிறார். இப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு கொடுத்த சீனிவாசனை ராமதாஸின் கைப்பாவை என விமர்சித்திருக்கிறார். நாட்டு நலன் கருதி ராமதாஸ் எழுப்பும் கேள்விகளை மீண்டும் எழுப்புபவர்கள் எல்லாம் ராமதாஸின் கைப்பாவை என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் ராமதாஸின் கைப்பாவைதான். இது ராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயம் தானே தவிர, வருத்தப்படத்தக்கது அல்ல.

அதேநேரத்தில் இப்போது விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவை அல்ல.... மாறாக, முரசொலி நிலம் தொடர்பான மூல ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியும் அவற்றை வெளியிட மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்?

முரசொலி நிலத்தை அதன் உரிமையாளர்கள் முறைப்படி வாங்கியிருந்தால், அந்நிலத்துக்கான 1985 ஆம் ஆண்டு பட்டாவைப் போலவே, நிலப்பதிவு ஆவணங்களும், மூலப் பத்திரங்களும் அவர்கள் வசம் இருந்திருக்க வேண்டும். ஆனால், நிலப்பதிவு ஆவணங்களை மு.க.ஸ்டாலின் இப்போது வரை வெளியிடவில்லை. அப்படியானால் அவர்களிடம் ஆவணங்கள் இருக்கின்றனவா, இல்லையா?

முரசொலி விவகாரத்தில் தமது சவாலுக்கு பதிலளிக்காமல் ராமதாஸ் மவுனமாகி விட்டதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். ராமதாஸின் சார்பில் 20 ஆம் தேதி நான் விடுத்த அறிக்கையை அவர் படிக்கவில்லை போலிருக்கிறது. பூனை கண்களை மூடிக் கொண்டே இருந்து விட்டதால், இன்னும் பொழுது விடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறது. சவால்களைக் கண்டு அஞ்சி ஓடிக்கொண்டிருப்பது மு.க.ஸ்டாலின்தான். அவரது பக்கம் நியாயமிருந்தால், அவரது மடியில் கனமில்லை என்றால் மூல ஆவணங்களை வெளியிடாது ஏன்?

மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்தில் ராமதாஸ் மீது அவதூறுப் புகார்களை ஸ்டாலின் அள்ளி வீசினார். அதை நிரூபிக்கத் தயாரா? அவ்வாறு நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்ற கேள்விக்கு இதுவரை பதிலும் கூறாமல், அரசியலில் இருந்தும் விலகாமல் இருப்பது தான் மு.க. ஸ்டாலினின் நேர்மையா?

அரசியல் அறம் என்பதற்கு மு.க ஸ்டாலினுக்குப் பொருள் தெரிந்திருந்தால் மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டுதான் அரசியல் பணிகளைத் தொடர வேண்டும். அதற்கான துணிச்சல் அவருக்கு உண்டா?

முரசொலி விவகாரத்தில் தனது நிலையை நியாயப்படுத்த முடியாத மு.க.ஸ்டாலின் சிக்கலை திசை திருப்பும் வகையில் எதை எதையோ பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் பஞ்சமி நிலம் எங்கு இருந்தாலும் மீட்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு. அதுமட்டுமின்றி, சென்னை அண்ணா அறிவாலயம், தமிழகத்தின் மற்ற மாவட்ட தலைநகரங்களில் திமுக தலைமை அலுவலகம் அமைக்க முறைகேடாக வளைக்கப்பட்ட இடங்கள் என எங்கு, யாருடைய நிலம் மோசடி செய்யப்பட்டிருந்தாலும் அதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் தமிழக அரசையும், நீதித்துறையையும் கேட்டுக் கொள்ள பாமக தயார்? பொய் வணிகர் மு.க.ஸ்டாலின் தயாரா? தெளிவான பதிலை திமுக அளிக்க வேண்டும்," என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in