Published : 23 Oct 2019 03:29 PM
Last Updated : 23 Oct 2019 03:29 PM

திருநங்கை பெயரை செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரைப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூகத்தில் திருநங்கைகளை மிகக்கேவலமாக ஒதுக்கிக் கேலி செய்த காலம் ஒன்றிருந்தது. காலம் மாற மாற திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. திருநங்கைகள் சமூகத்தை மூன்றாம் பாலினம் என அறிவித்து அவர்களுக்கான ஒதுக்கீடும் வந்தது.

இன்று சமுதாயத்தில் திருநங்கைகள் படித்துப் பட்டம் பெற்று பொறியாளர்கள், காவல்துறை, கலைத்துறை, மருத்துவம், அரசியல் என பல்வேறு துறைகளில் முன்னுக்கு வருகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறப் போராடி நீதிமன்றம் வரை செல்லவேண்டி உள்ளது.

காவல்துறையில் எஸ்.ஐ. தேர்வில் தன்னைத் தேர்வு செய்ய பிரித்திகா யாஷினி நீதிமன்றம் மூலமே நியாயம் பெற்று இன்று காவல்துறையில் பணியாற்றுகிறார். இந்நிலையில் மற்றொரு வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

செவிலியர் படிப்பை முடித்து தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய திருநங்கை ரக்‌ஷிகா ராஜ் விண்ணப்பித்தார். மூன்றாம் பாலினப் பெண் என தன்னைப் பதிவு செய்யக்கோரி ரக்‌ஷிகா அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவரின் பதிவு குறித்த கவுன்சில் விதிகளில் திருத்தம் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் மனுதாரரைப் பொறுத்தவரை மூன்றாம் பாலினப் பெண் என பதிவு செய்ய இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வரை திருநங்கை ரக்‌ஷிகா ராஜின் பெயரை செவிலியர் கவுன்சிலில் தற்காலிகமாகப் பதிவு செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x