Published : 23 Oct 2019 02:01 PM
Last Updated : 23 Oct 2019 02:01 PM

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வனவிலங்குகளுக்கு மட்டும்தான்; அதைவிடக் கொடியவர்களுக்கு கிடையாது: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயிலில் மகாதீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதி வழங்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, அறநிலையத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் தாலுகா பொலுவம்பட்டி காப்புக்காடு பகுதியில் வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மகா தீபத்தை ஒட்டி டிசம்பர் 10 முதல் 12 வரை மகா தீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கார்த்திகை மகா தீபத்தை ஒட்டி பக்தர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அணையா தீபக்குழு அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளாக பக்தர்களை அழைத்துச் சென்று வருவதாக தனது மனுவில் சரவணன் கூறியுள்ளார்.

2015 முதல் வனத்துறை அனுமதி பெற்று கோயிலுக்கு சென்றுவரும் நிலையில் இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றவும், பூஜைகள் செய்யவும் அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 20-ல் அரசுக்கு அனுப்பிய மனுவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை இன்று (அக்.23) விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு, வனத்துறை, அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டும்தானே தவிர, அவற்றை விடக் கொடியவர்களுக்குக் கிடையாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x