Published : 23 Oct 2019 10:32 AM
Last Updated : 23 Oct 2019 10:32 AM

ஜோதிமணியின் செயல்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: மருமகன் குறித்து கருணாநிதியின் மகள் செல்வி விளக்கம்

சென்னை

தனது மருமகன் ஜோதிமணியின் செயல்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி விளக்கம் அளித்துள்ளார்.

கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி. அவரது நண்பர் ஜாகீர் அகமது தமான். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த காஸ்மெட்டிக் வியாபாரியான தினேஷ் என்பவரை தொடர்புகொண்ட தமான், ”எனக்கு தெரிந்தவரிடம் கோடிக்கணக்கில் 100 ரூபாய் நோட்டுகள் உள்ளன. 500, 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ. 80 லட்சம் கொடுத்தால் ரூ. 1 கோடி கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய தினேஷ், நீலாங்கரையில் உள்ள ஒரு பங்களாவுக்கு ரூ. 80 லட்சத்துடன் சென்றுள்ளார். அங்கு செல்வியின் மருமகன் ஜோதிமணி, ஜாகீர் அகமது தமான் உள்ளிட்ட 5 பேர் இருந்துள்ளனர். தினேஷிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு அதை எண்ணி பார்ப்பதாகக் கூறி வீட்டின் உள்ளே சென்றவர்கள் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த தினேஷ், நீலாங்கரை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து நீலாங்கரை காவல் துறையினர் ஜோதிமணி, ஜாகீர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் ஜோதிமணி, செல்வியின் மருமகன் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புகார்அளித்த தினேஷுக்கும், ஜோதிமணிக்கும் சமரசம் ஏற்பட்டதாகவும், தினேஷிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை அவர் திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்வியும், அவரது கணவர் செல்வமும் நேற்றுநாளிதழ் ஒன்றில் அளித்த விளம்பரத்தில், "எங்கள் மருமகன் டாக்டர் வி.எம். ஜோதிமணியின் செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல. எனவே, இந்த பொது அறிவிப்பின் மூலம்ஜோதிமணியின் எந்தச் செயல் களுக்கும், நடவடிக்கைகளுக்கும் நாங்கள் பொறுப்புக்குள்ளாக மாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறோம்"என்று தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பண மோசடி புகாரில் சிக்கியிருப்பதும், அதனைத் தொடர்ந்து மருமகனின் செயல்பாடுகளுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று செல்வியும், அவரது கணவர் செல்வமும் பகிரங்கமாக அறிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x