Published : 23 Oct 2019 09:15 AM
Last Updated : 23 Oct 2019 09:15 AM

மழையால் சேதமான பொருட்களை ரேஷனில் விநியோகிக்க வேண்டாம்: கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தல்

சென்னை

வடகிழக்கு பருவமழை மற்றும் பண்டிகை காலத்தில் கூட்டுறவுத் துறை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:

கடந்தகால அனுபவங்கள் அடிப்படையில், மழை மற்றும் புயலால்பாதிப்புக்கு உள்ளாகக் கூடியதாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகள், கிடங்குகளில் உள்ள பொருட்களை உயர்வான பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும். அரிசி, மண்ணெண்ணெய், உப்பு, மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள் போன்ற அத்தியாவசியப் பெருட்களை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். தேவையான வாகனங்கள், தார்ப்பாய்கள், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மழையால் அத்தியாவசியப் பொருட்கள் சேதமடைந்து தரமற்ற நிலையில் இருந்தால், அவற்றைஉடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு மாற்றாக நல்ல தரமான பொருட்களை காலம் தாழ்த்தாமல் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும். தரைப்பகுதி ஈரமாக இருந்தால் அத்தியாவசிய பொருட்களை மரப்பலகைகள் மீது அடுக்கி வைத்து பாதுகாக்க வேண்டும்.

கட்டுப்பாட்டறை தொலைபேசி எண் குறித்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒட்டப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x